Jan 25, 2016

அம்மாவென்றழைக்காத பிஞ்சுகளே!


அம்மாவென்றழைக்காத பிஞ்சுகளே – என்றுமே
அன்னையை அறியாத செல்வங்களே
ஆயிரம் முகங்களைக் கண்டிருப்பீர் – உங்கள்
தாயின் முகமங்கே தோன்றியதா?

இன்னொரு தாயிடம் பாலருந்தி
எடுத்தவர் அணைப்பினில் கண்ணயர்ந்து
ஒவ்வொருபெண்ணையும் அன்னையென
எண்ணியே ஏமாந்துபோனீர்களோ?

பசி வந்தபோதும் அழ மறந்தீர்
பாயினில் என்றுமே துணை இழந்தீர்
நோயுற்ற வேளை தனித்திருந்தீர்
தாயன்பைத் தேடியே தவித்திருந்தீர்.

கட்டி அணைத்தும்மை ஆற்றிடவும்
வட்டிலில் சோறிட்டு ஊட்டிடவும்
பட்டினை உடுத்தி மகிழ்ந்திடவும்
பாட்டினால் துயில்கொள்ள வைத்திடவும்,

எட்டிய கரங்களைப் பற்றிடவும்
எட்டி நடைபோடப் பயிற்றிடவும்
உமக்கொரு அன்னை இருந்தாளம்மா
இனி அந்த அன்னை தோன்றாளம்மா.

பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கலாமோ
பேதையென்ற பெயரென்றும் எடுக்கலாமோ
பெயர் சொன்ன அப்பனும் மறையலாமோ
தாயென்ற உறவொன்று தொலையலாமோ?

ஊரென்று சொல்ல ஒரு இடமுமில்லை
உறவென்று கூற ஒரு உயிருமில்லை
போரென்ற பெயரால் உம்மைப் பிரித்தனரோ
பாராளும் ஆசையால் வாழ்வை வதைத்தனரோ!

தங்களின் முலைகளைத் தந்திடவே – இங்கே
தாய்மார்கள் நிறையவே உள்ளாரம்மா
நேசம் மிகுந்தவர் நாடிதம்மா
நாளை உமக்கு வழி பிறக்குமம்மா!
----

No comments:

Post a Comment