Oct 31, 2013

ஆயுதம் செய்வாய்!


[போர் ஓய்ந்தது, ஆனால் புயல் ஓயவில்லை. வன்னியின் விளை நிலத்தில் விலைமாதுகளை விதைக்கிறார்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். ஆதரவற்ற பெண்களின் கற்புக்கு விலை பேசும் இக்கயவர்களை இனங்கண்டு இளம் பெண்கள் தம்மைத் தாமே காப்பாற்றவேண்டுமென எண்ணி இக்கவிதையை வரைந்தேன்] 

நீ நினைக்கிறாயா
உனக்கு இனி
எவருமே இல்லையென்று,
தவிக்கிறாயா
தனியனாய்ப் போனாயென்று?

பெண்ணே,
பைத்தியமா உனக்கு?

காணாமற் போனது
உன்
கணவன் மட்டுமே
கரங்களல்ல
கனவுகளுமல்ல.

உன் அகராதியில்
அபலை என்ற சொல்லிருந்தால்
உடனே அதை அழித்துவிடு!
பாவம், பேதை, பெண் ஜன்மம்
என்றிருந்தால் அந்தப்
பக்கத்தையே கிழித்துவிடு!

கழுத்தில் தொங்குவது
மாங்கல்யமா
மறைத்து வை!
பதிலுக்குப்
புன்னகை இருக்கிறதுதானே
போட்டுக்கொள்!

போனவனுக்குப்
பகைவர்கள்
பலரிருக்கலாம்.
போனவன் போனவனே
ஆகையால்
புலம்புவதை நிறுத்து!

இனி
உன்னையே நீ வருத்துவதில்
அர்த்தமே இல்லை.
உன்னையே நீ
அடித்து எழுப்புவதில்தான்
ஆரம்பமே இருக்கிறது.

தெரிந்துகொள்,
தாலி
பெண்ணுக்கு
வேலியாயிருந்த காலம்
காவியக் காலம்,

இது
கலிகாலத்துக்கு அடுத்த
காடையர்கள் காலம்.
காவி உடுப்புக்குள்ளும்
கோவலன்கள் உலாவும்
கொள்ளையர்கள் காலம்!

அன்று
சேல்பட்டு அழிந்தன
வன்னியின் வயற் பொழில்
இன்று கயவரின்
கண்பட்டு அழிந்தன
கன்னியர் கற்பு.

பெண்களைத்
தாயாக மதிக்காது
தாயாக மாற்றும்
வள்ளல்கள்
திசைதோறும் நாறுகிறார்கள்.
மூக்கை மூடிக்கொள்
கண்ணை மட்டும் திறந்துகொள்.

கடவுள்கள் உன்னைக்
காப்பாற்றப்போவதில்லை
அறிந்துகொள்,
ஏழையாய்ப் போனாலும் நீ
கோழையாய்ப் போய்விடவில்லை!

போர் கண்ட மண்ணுக்கு நீ
புதியவளல்ல, பெண்ணே!
பட்டினி கிடந்து
பழகிப்போனவள்தானே,
பசி வந்தபோதும்
பணியாது வாழ்ந்து கொள்!

மௌனம்தான் உன்
முதல் எதிரி
மறந்துவிடாதே!
உடலுக்குத் துணி
உள்ளத்துக்குத் துணிவு!

நாளைக்கென்றிருக்காதே
இன்றே உன் கரங்களை
நீட்டிப்பார்
அவையே உனக்கு இனி
உதவப்போகும் தோழர்கள்!

ஆயுதம் செய்வாய்!


[போர் ஓய்ந்தது, ஆனால் புயல் ஓயவில்லை. வன்னியின் விளை நிலத்தில் விலைமாதுகளை விதைக்கிறார்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். ஆதரவற்ற பெண்களின் கற்புக்கு விலை பேசும் இக்கயவர்களை இனங்கண்டு இளம் பெண்கள் தம்மைத் தாமே காப்பாற்றவேண்டுமென எண்ணி இக்கவிதையை வரைந்தேன்] 

நீ நினைக்கிறாயா
உனக்கு இனி
எவருமே இல்லையென்று,
தவிக்கிறாயா
தனியனாய்ப் போனாயென்று?

பெண்ணே,
பைத்தியமா உனக்கு?

காணாமற் போனது
உன்
கணவன் மட்டுமே
கரங்களல்ல
கனவுகளுமல்ல.

உன் அகராதியில்
அபலை என்ற சொல்லிருந்தால்
உடனே அதை அழித்துவிடு!
பாவம், பேதை, பெண் ஜன்மம்
என்றிருந்தால் அந்தப்
பக்கத்தையே கிழித்துவிடு!

கழுத்தில் தொங்குவது
மாங்கல்யமா
மறைத்து வை!
பதிலுக்குப்
புன்னகை இருக்கிறதுதானே
போட்டுக்கொள்!

போனவனுக்குப்
பகைவர்கள்
பலரிருக்கலாம்.
போனவன் போனவனே
ஆகையால்
புலம்புவதை நிறுத்து!

இனி
உன்னையே நீ வருத்துவதில்
அர்த்தமே இல்லை.
உன்னையே நீ
அடித்து எழுப்புவதில்தான்
ஆரம்பமே இருக்கிறது.

தெரிந்துகொள்,
தாலி
பெண்ணுக்கு
வேலியாயிருந்த காலம்
காவியக் காலம்,

இது
கலிகாலத்துக்கு அடுத்த
காடையர்கள் காலம்.
காவி உடுப்புக்குள்ளும்
கோவலன்கள் உலாவும்
கொள்ளையர்கள் காலம்!

அன்று
சேல்பட்டு அழிந்தன
வன்னியின் வயற் பொழில்
இன்று கயவரின்
கண்பட்டு அழிந்தன
கன்னியர் கற்பு.

பெண்களைத்
தாயாக மதிக்காது
தாயாக மாற்றும்
வள்ளல்கள்
திசைதோறும் நாறுகிறார்கள்.
மூக்கை மூடிக்கொள்
கண்ணை மட்டும் திறந்துகொள்.

கடவுள்கள் உன்னைக்
காப்பாற்றப்போவதில்லை
அறிந்துகொள்,
ஏழையாய்ப் போனாலும் நீ
கோழையாய்ப் போய்விடவில்லை!

போர் கண்ட மண்ணுக்கு நீ
புதியவளல்ல, பெண்ணே!
பட்டினி கிடந்து
பழகிப்போனவள்தானே,
பசி வந்தபோதும்
பணியாது வாழ்ந்து கொள்!

மௌனம்தான் உன்
முதல் எதிரி
மறந்துவிடாதே!
உடலுக்குத் துணி
உள்ளத்துக்குத் துணிவு!

நாளைக்கென்றிருக்காதே
இன்றே உன் கரங்களை
நீட்டிப்பார்
அவையே உனக்கு இனி
உதவப்போகும் தோழர்கள்!

Oct 3, 2013


தட்டி வான்


இதைத்
தட்டி வான் என்பார்கள்
நானோ
ஏழை உழைப்பாளிகளின்
இடர் துடைக்க வந்த
இந்திர விமானமென்பேன்.

பஹூம்! பஹூம்!
இதோ
தட்டி வான் ஹோர்ன் அடித்துத்
தூள் பறக்க வருகிறது.

வாசல் படியில்
கட்டிய சாரம் அவிழ்ந்துவிழக்
கூவுகிறான் கொண்டக்டர்!

நெல்லியடி-கொடியாமம்!
உடுப்பிட்டி-யாப்பாணம்!
ஐச்சுவேலி-தெல்லிப்பழை!
மானிப்பாய்-சங்கானை!
தட்டி வான்
தடம் பதிக்காத
தெரு இங்கே
எதுவுமில்லை.

வாவென்று கேட்டால்
கிளிநொச்சிக்குக் கூடக்
கதறக் கதற ஒடும்
என்றுமே சாகாத
இயம வாகனம்!

இருபதுபேர் மட்டும்
இருக்கக்கூடிய இருக்கைகளில்
இருநூறு பேரை
ஏற்றிக் காட்டுவான்
கொண்டக்டர்
கோதாரியிலைபோவான்.

நாலு பக்கமும் வாசலுள்ள
வாகனங்களுள் போட்டியென்றால்
தட்டி வான்தான்
முதல் பரிசைத்
தட்டிக்கொண்டு போகும்.

திருமண வீட்டுக்குத்
தாலியை மறந்தாலும்
தட்டி வானை
மறந்திருப்போமா?

மழையையும் வெயிலையும்
உள்ளிருந்தே அனுபவிக்க
எவர் விடுவார்
இப்படியோர்
ஆனந்த வாகனம்?

நாலுபேர் வந்து
தள்ளினால் மட்டுமே
துள்ளிப் புறப்படும்
தேசிய வாகனம் நீ!.

என்றாலும் உனக்கு
என்றென்றும் நன்றி.

நீ
சாமானிய தமிழனின்
சில்லறைகளை நம்பிச்
சவாரி செய்தவனல்லவா?

எங்கள் தெருக்களில் நீ
ஒடித் திரிந்ததால்தான்
யாழ்ப்பாணம் அன்று
வாழ்ப்பாணம் ஆகியது
இல்லையேல்
என்றோ அது
கூழ்ப்பானை யாயிருக்கும்.

ஐம்பது ஆண்டுகள்
அலற அலற
ஓடித் திரிந்தும்
உன் உடம்பு
ஒருபோதும்
ஒரேயடியாய் வீழ்ந்ததில்லை.

உன்னைப் படைத்த
அமெரிக்க கம்பெனியையே
பிரமிக்க வைத்த
புஷ்பக விமானமல்லவா நீ!

வெட்ட வெட்டத் தளைக்கும்
வாழைகூட
ஒரு நாள்
வாடி விழுந்துவிடும் – நீயோ
வருடங்கள் பல கடந்தும்
இளமையாய் இருந்து
கிழடுகளைக் காதலித்தாய்.

பொலிசுக்கு டிமிக்கி கொடுப்பதில்
பட்டம் எடுத்தவனே
பெட்றோல் இல்லாத காலத்திலும்
புதுமைகள் செய்தவன் நீ!

கல்போடா மண்போடாப்
பாதைகளிலும்
புகுந்து புறப்பட்டவனல்லவா?

நீ ஓடாது போயிருந்தால்

சுன்னாகத்து மாம்பழங்களைச்
சுமந்து வருவது யார்?

செம்பியன்பற்றுச் சுறா மீனைச்
சுவைபார்த் திருப்போமா?

கொடிகாமத்துத் தேங்காய் இன்றிக்
கோயில் தேர் நகர்ந்திருக்குமா?

நீர்வேலி வாழைக்குலைக்கு
யார் இங்கே வண்டில் விட்டார்?

கரணவாய்ப் புகையிலை
கனவாய்த்தான் போயிருக்கும்!

தீவகத்துக் தலங்களுக்குத்
தீர்த்த யாத்திரை போயிருப்போமா?

கீரிமலைக் கடற்கரையில்
கள்ளுக்கு முன்னேயும் பின்னேயும்
கிரியைகள் செய்திருப்போமா?

வல்லிபுரக் கோயிலின்
தளிசைக்காரிகளுக்கு
துணைபோவது யாராம்?

செல்வச் சந்நிதிக்குக்
கடலைக்காரி முதல்
கரகம் காவடி வரை
கொண்டுபோய்ச் சேர்த்தவர்
யாரென்று கேட்கிறேன்.

தாராள மனமுள்ள
தட்டி வானே
உன்
துயரையும் நானறிவேன்.

மெட்டி அணிந்த மங்கையர்
உன் பலகைத்
தட்டில் ஏறியதில்லை.
சேலை உடுத்தியவர்கள் உன்னைச்
சேர நினைப்பதில்லை.
டியூட்டரிக் குமரிகள் உன்னைத்
திரும்பியும் பார்ப்பதில்லை

குறுக்குக் கட்டிய பெண்களும்
கடகம் தூக்கிய கிழவிகளுமே
உன் கைபிடித்த
ஐஸ்வர்ய ராய்கள்!

துயரப்படாதே தட்டி வானே,
தமிழனின்
மூச்சிருக்கும் வரை
உன்னைப் பற்றிப்
பேச்சிருக்கும்!
0-0-0-0-0-0

தமிழகத்து நண்பர்களுக்கு: இப்படத்திலுள்ள வேன் இலங்கையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குமுன் இறக்குமதிசெய்யப்பட்டதாக அறியப்படுகிறது. இன்று இது பெரும்பாலும் அருகிவிட்டபோதிலும் ஓரிரு வேன்களாவது யாழ்ப்பாணத்தில் தற்சமயம் பொதுமக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுகின்றனவென நம்புகிறேன். மற்றப் பிரதேசங்களில் இது எப்போதோ மாண்டிருக்கவேண்டும். இது யாழ்ப்பாண மக்களின் அன்புக்கும் அபிமானத்துக்கும் சிலவேளை வெறுப்புக்கும் பாத்திரமானதோர் வாகனம். இத்தனியார் வாகனம் தனது பின்பகுதியிலும் பக்கவாட்டிலும் தட்டி (தடுப்பு) போன்றே தோன்றுவதாலும் அதைக் கட்டுவதற்கு வேண்டிய குறுக்குத் தடிகளுடன் இணைந்திருப்பதாலும் மக்களிடம் தட்டி வான் என்ற செல்லப்பெயரை எடுத்திருக்கவேண்டும்.

---------------