Jan 11, 2013

மரங்கள் என் நண்பர்கள்



செழித்த இலைகளின்
சிரிப்பினில் இணைவேன்
சாயும் கிளைகளின்
இசையினில் திளைப்பேன்

ஒழுகும் நிழலின்
அணைப்பினில் அயர்வேன்
தழுவும் இதழ்களின்
காதலில் கரைவேன்

நகரும் செடிகளின்
நடனங்கள் ரசிப்பேன்
தவழும் கொடிகளில்
குழந்தையைக் காண்பேன்

படரும் செடிகளின்
நட்பினில் நெகிழ்வேன்
பற்றும் கொடிகளின்
பாசத்தில் பதைப்பேன்

மாயம் காட்டும்
மலர்களில் மகிழ்வேன்
மேப்பிள் மடியில்
மதுரத்தை உண்பேன்

தேயும் மரங்களின்
தியாகத்தை மதிப்பேன்
தாங்கும் தண்டினில்
தந்தையைத் துதிப்பேன்

அணைக்கும் கொடிகளில்
அன்னையை நினைப்பேன்
அமைதியின் ஆட்சியில்
இறைவனைக் காண்பேன்!

No comments:

Post a Comment