Jan 16, 2013

இறைவனைக் கண்டால்...


இனியொரு புதிய  உலகினைக்  கேட்பேன்
உலகம் முழுவதும் ஒரே மொழி கேட்பேன்
எல்லைகள் அற்ற நாடுகள் கேட்பேன்
எதிரிகள் இல்லா இனங்களைக் கேட்பேன்.

சமத்துவ நெறியில் அரசொன்று கேட்பேன்
சட்டங்களில்லா நீதியைக் கேட்பேன்
போர்க்குணமற்ற தலைவர்கள் கேட்பேன்
பாராளுவதிலும் பெருந்தன்மை கேட்பேன்.

சாதிகள் ஒழிந்த சமுதாயம் கேட்பேன்
சேரிகளில்லா ஊர்களைக் கேட்பேன்
சேர்ந்தே வாழும் சனங்களைக் கேட்பேன்
சோர்ந்த மனத்தினர் அருகிடக் கேட்பேன்.

ஊரோடு உண்ணும் உறவினர் கேட்பேன்
உறவினரிடையே இணக்கத்தைக் கேட்பேன்
சுயநலம் கருதா நண்பர்கள் கேட்பேன்
செய்நன்றி மறவா அயலவர் கேட்பேன்.

வேலிகளில்லா வீடுகள் கேட்பேன்
போலிகளற்ற இதயங்கள் கேட்பேன்
பரிந்தே உதவும் தொண்டர்கள் கேட்பேன்
வாரிக் கொடுக்கும் வள்ளல்கள் கேட்பேன்.

திறமையை மதிக்கத் தெரிந்திடக் கேட்பேன்
திருடர்கள் தாமாய்த் திருந்திடக் கேட்பேன்
தன்திறன் அறியும் திறமையைக் கேட்பேன்
திறமையின் வழியில் சிறந்திடக் கேட்பேன்.

வேலைகள் எங்கும் மலிந்திடக் கேட்பேன்
கிராமங்கள் தோறும் கைத்தொழில் கேட்பென்
பொருளுடையோர்கள் பகிர்ந்திடக் கேட்பேன்
பொருளில்லாதோர் முயன்றிடக் கேட்பேன்.

ஆற்றினில் வெள்ளம் அடங்கிடக் கேட்பேன்.
எரிமலை தன்னுள் ஒடுங்கிடக் கேட்பேன்
காற்றிலும் மழையிலும் கருணையைக் கேட்பேன்
சமுத்திரம் அனைத்திலும் சாந்தியைக் கேட்பேன்

கடலினில் முத்துகள் மலிந்திடக் கேட்பேன்
காடுகள் கற்பைக் காத்திடக் கேட்பேன்
கழனியில் தானியம் நிறைந்திடக் கேட்பேன்
காலங்கள் தோறும் மாரியைக் கேட்பேன்.

அருவிகள் யாவும் இணைந்திடக் கேட்பேன்
ஆறுகள் அனைத்தும் ‘அணை’ந்திடக் கேட்பேன்
எண்ணெய் வளங்கள் எங்கிலும் கேட்பேன்
தாதுக்கள் திரவியம் தோண்டிடக் கேட்பேன்.

ஆழியின் அகந்தை அழிந்திடக் கேட்பேன்                                                        
மாரியின் சீற்றம் முடங்கிடக் கேட்பேன்
இடிகளின் அக்கினி அணைந்திடக் கேட்பேன்
ஊழியின் உக்கிரம் ஆறிடக் கேட்பேன்.

ஓசோன் உலகைக் காத்திடக் கேட்பேன்
அழுக்கு வாய்வுகள் அழிந்திடக் கேட்பேன்
சூழலின் தூய்மை போற்றிடக் கேட்பேன்
சேற்றினைக் கழிப்போர் கற்றிடக் கேட்பேன்.

மாரிக் காடுகள் செழித்திடக் கேட்பேன்.
தார்மண் மடிகளின் தயவினைக் கேட்பேன்
எண்ணேய் வளங்கள் ஊறிடக் கேட்பேன்
இயற்கையின் செல்வம் பகிர்ந்திடக் கேட்பேன்.

வாவிகள் யாவும் நன்நீர் கேட்பேன்
சேல் விளையாடும் வயல்களைக் கேட்பேன்
நீர்நிலை யாவும் நிறைந்திடக் கேட்பேன்
நெற் கமக்காரர் மகிழ்ந்திடக் கேட்பேன்.

தூந்தர பூமி உறைந்திடக் கேட்பேன்
துருவக் கரடிகள் தளைத்திடக் கேட்பேன்
உறைபனி விலங்குகள் வாழ்ந்திடக் கேட்பேன்
குளிர்நிலக் காடுகள் காத்திடக் கேட்பேன்.

உயிர்க்கொலிக் கிருமிகள் அழிந்திடக் கேட்பேன்
அண்டத்துக் கோளங்கள் ஒழுங்கினைக் கேட்பேன்
அகிலத்து வெம்மை தணிந்திடக் கேட்பேன்
ஆழியின் மட்டம் அடங்கிடக் கேட்பேன்.

உழைக்கும் மக்கள் உரிமைகள் கேட்பேன்
உண்டு களிப்போர் உணர்ந்திடக் கேட்பேன்
பாட்டாளி வர்க்கம் இணைந்திடக் கேட்பேன்
பாரினில் செல்வம் பகிர்ந்திடக் கேட்பேன்.

தமிழருக் கென்று நிலமொன்று கேட்பேன்
நிலத்தினில் ஒற்றுமை நிலவிடக் கேட்பேன்
போரினில் நாட்டம் போய்விடக் கேட்பேன்
புரிந்துணர் நெஞ்சுடன் பேசிடக் கேட்பேன்.

கதவுகள் இல்லா கோயில்கள் கேட்பேன்
கோயிலில் கலைகள் வளர்ந்திடக் கேட்பேன்
சாமிமார் இல்லா சமயங்கள் கேட்பேன்
சமயங்கள் சாயங்கள் கலைந்திடக் கேட்பென்.

இல்லங்கள் அனைத்திலும் திருக்குறள் கேட்பேன்
இலக்கணமற்ற கவிதைகள் கேட்பேன்
இசையினில் வாழ்வு இயைந்திடக் கேட்பேன்.
ஊரெங்கும் நூலகம் அமைந்திடக் கேட்பேன்

பெற்றார்களிடத்தே பொறுமையைக் கேட்பேன்
பிள்ளைகளிடத்தே பணிவினைக் கேட்பேன்
பெண்களினிடத்தே எளிமையைக் கேட்பேன்
பெரியோரிடத்தே பண்பினைக் கேட்பேன்.

இளைஞர்கள் மத்தியில் எழுச்சியைக் கேட்பேன்
இல்லாதோருக்கு இரங்கிடக் கேட்பேன்
ஏழைகள் முயற்சியில் ஏற்றத்தைக் கேட்பேன்.
இரந்தே வாழ்பவர் ஒழிந்திடக் கேட்பேன்.

அகமுடையாளிடம் அடக்கத்தைக் கேட்பேன்
அணைப்பவன் மனதில் அன்பினைக் கேட்பேன்
இரவிலும் பகலிலும் ஒருமனம் கேட்பேன்
இருவரின் போக்கிலும் பொறுமையைக் கேட்பேன்.

பெண்களுக்குரிமை பிறப்பிக்கக் கேட்பேன்
ஆண்களின் கற்பு உரைத்திடக் கேட்பேன்
மனையாளின் மனதை அறிந்திடக் கேட்பேன்
மங்கையைத் தாயாய் மதித்திடக் கேட்பேன்.

காதலுக்கென்றொரு கடவுளைக் கேட்பேன்
கன்னியர் நெஞ்சினில் கருணையைக் கேட்பேன்
காளையர் பெண்களைப் புரிந்திடக் கேட்பேன்
களவியல் வாழ்விலும் கண்ணியம் கேட்பேன்.

மானுடம் மதிக்கும் மனிதர்கள் கேட்பேன்!

No comments:

Post a Comment