Aug 31, 2012

கண்மணி

ஒவ்வொரு நாட்காலையும் அவளை நான் காணும்போது அப்போதுதான் துயிலெழுந்து முகம் திருத்தி வந்தவள்போன்ற பொலிவுடன் தோன்றுவாள். அவளைக் கண்டதும் நான் கேட்கும் முதல் கேள்வி “How are you?” அதற்கு அவளிட மிருந்து உடனே பதில் வரும்: “I am fine” கூடவே அவள் முகத்தில் ஒரு புன்னகையோடு கலந்த மலர்ச்சி.

ரொராண்டோ நகரின் யூனிவர்சிடி அவனியு. இருமருங்கும் அடுக்கடுக்காய் விண்ணைமுட்டும் கட்டிடங்கள். அவற்றினூடாகப் புகுந்து விளையாடும் மென்மையான தென்றல். முகத்திலடிக்காத காலை வெயில். இந்த வேளையில் அலுவலகத்துக்கு நடைபயில்வதே ஒரு அலாதியான அனுபவம்.

யூனிவர்சிடி அவெனியு/கிங் வீதி சந்திப்பின் வடமேற்கு மூலையில் அவளை நான் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு நான் நேரத்தோடு அலுவலகத்துக்குப்போன ஒவ்வொரு காலையும் அவளை நான் அங்கே சந்திக்கத் தவறியதில்லை. அந்த மூலையில் நெடு நேரம் எனக்காகக் காத்திருந்தவள் போல் அவள் நிற்பாள். கையில் தூக்கமுடியாத் சுமை. ஆயினும் துவண்டு போகாமல் நடைபாதையில் விரைந்து கொண்டிருப்போர் ஒவ்வொருவரையும் ஒரு கணத்துக்குள் சந்தித்து அவர்களிடம் தன்கையிலுள்ள இலவச Metro பத்திரிகையைத் திணித்துவிடும் அழகையும் தொழில் நுட்பத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

இந்த இரக்கமற்ற நகரச்சூழலில் இவள் ஏன் வந்து மாட்டிக்கொண்டாள் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். இவ்வளவுக்கும் அவளுக்குப் பத்துவயது இருக்கலாம். முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்துப் பெண். வட்டவடிவமான கண்கள். நடுவே கரிய விழிகள். எவரையும் கவர்ந்துவிடக்கூடிய காந்த சக்தியைத் தேக்கிவைதிருக்கும் அவள் கண்களை நான் முதலில் சந்தித்தபோது கொஞ்சம் அதிந்துதான்போனேன். அவளுக்கு நான் வைத்த பெயர் கண்மணி

இலவசப்பத்திரிகையை வினியோகிப்பதற்கு அதிகம் திறமை தேவையில்லையென்று நினைப்பீர்கள். இது சோம்பேறிகள் நடமாடும் சந்தியல்ல. எல்லாரும் அவசர உலகத்தின் பிரதிநிதிகள். இன்று வண்டியிலிருந்து இறங்கிய கையிருப்பு முழுவதையும் அவர்கள் கையில் திணித்துவிடவேண்டும். அதுவும் காலை பத்து மணிக்குள். கண்மணியின் அன்றாடச் செயற்பாடு அல்லது தொழில் வாழ்க்கை மிகச்சிறியது. ஆயினும் அதில் அவள் அளப்பற்ற வெற்றியும் மகிழ்ச்சியும் அடைந்தவள் போலவே எனக்குத் தோன்றுவாள். 

கண்மணி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுமி. அவள் ஒரு சிலர் போலப் பெயர் பெற்றவளில்லை. சிறிய பணியாக இருந்தபோதும் அவள் அதனை ஆற்றிய அழகு என்னை ஆழமாய்ச் சிந்திக்கவைத்தது.

நாம் செய்யும் தொழில் மிகவும் எளிமையானதாக இருக்கலாம், உடல் ரீதியானதாக இருக்கலாம். உதாரணமாக, அன்றாடக் கூலி வேலைக்குப் போகிறவராகவோ குப்பை அள்ளுகிறவராகவோ இருக்கலாம். ஆயினும் நாம் செய்யும் எந்தத் தொழிலையும் நாம் வாழும் உலகை மேம்படச் செய்யும் ஒரு சந்தர்ப்பமாகக் கருதிச் செய்வோமானால் ஒரு இலட்சியத்தை நிறைவேற்றவெண்ணி அதனைச் செய்வதுபோன்ற உணர்வுடையவராகவும் சேவை மனப்பான்மை உடையவராகவும் எங்களை உயர்த்திக் கொள்வோம்.

மகாத்மா காந்தி நன்கு அவதானித்து அறிந்தபின்னர்தான் கூறினார்: நீங்கள் செய்யப்போகும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்பது அவசியமில்லை, உங்களால் முடிந்த அளவு அதனைச் சிறப்பாகச் செய்யுங்கள் அதை உங்கள் மிக முக்கியமான பணியெனக் கருதி உங்கள் முழு அறிவையும் கவனத்தையும் அதன்மீது செலுத்துங்கள். அது சிறிய பணியாக இருக்கலாம் ஆனால் அதனை எப்படி ஆற்றினீர்கள் என்பதிலிருந்துதான் நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்.

சிறுவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அன்றாடம் தெருவோரங்களிலும் கடைத் தெருக்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் நூலகங்களிலும் அவர்களை நன்கு அவதானித்திருக்கிறேன். அவர்களில் பலர் எனது நண்பர்களாக இருக்கிறார்கள். அடுத்தவீட்டு மூன்று வயது லியாம் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவான். நடைபாதையில் கண்டதும் "Give me a hug" என்று நான் சொன்னதும் ஓடிவந்து கட்டி அணைப்பான். அவன் கையில் எப்போதும் இருக்கும் ஒரு விளையாட்டுக் கார். ஒருமுறை அதற்கு ஐந்து மில்லியன் டாலர்கள் தருவதாகச் சொன்னேன் ஆனால் அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அடுத்தமுறை அவனை நான் கண்டபோது ஓடிவந்து தன் விளையாட்டுக் காரை என்முன்னே நீட்டினான். அப்போது அவன் முகத்தில் படர்ந்த பெருமிதம் அளப்பரியது.

சிறுவர்களே எனது ஹீரோக்கள். முன்பின் தெரியாதவர் மீதும் உடனே அன்பைப் பொழியும் பரந்த மனம்;  இன்னொருவர் மீது ஒருகணம் கோபப்பட்டாலும் அடுத்தகணமே அதை மறந்துவிடும் மனப்பக்குவம்; பொறாமை என்பது என்னவென்பதே தெரியாத பேருள்ளம்; மற்றவர்களுக்காக இரங்கும் இதயம்; கூடிப்பழகுவதிலுள்ள பேரார்வம் இவையெல்லாம் அவர்களே எனக்கு ஆசான்கள் என எண்ணவைக்கின்றன.

கண்மணி அண்மையில் கிடைத்த இன்னோரு நண்பி.  கோடை மறைந்து இலையுதிர் காலம் துவங்கியதும் அவளை வழக்கமான சந்தியில் காணமுடியாமற் போய்விட்டது. ஆயினும் இன்றும் அவளை நான் மறவாதிருப்பதற்குக் காரணம் அவளின் காந்தக் கண்களில் நான் கட்டுப்பட்டதனாலல்ல அந்தக் கண்களில் தேங்கி நின்ற மனவுறுதியும் செய்வதைத் திருத்தமாகச் செய்வதில் காட்டிய அக்கறையும் அந்நியர்களையும் அறிந்தவர்கள்போல் நடத்திய நேர்த்தியும் எனக்கு நிறையப் பாடம் புகட்டியதனாலாகும்.

கண்மணி போன்றோரே இன்று நமக்கு உந்துசக்தியாக இருக்கிறார்கள். இவள் போன்றோரே இந்தக் குழப்பம் மிகுந்த உலகத்தில் தலைமைத்துவத்துக்கு எமக்குத் தேவைப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment