Aug 19, 2012

கத்தரித் தோட்டத்து வெருளி


ஊருக்குப் போனால் இன்றெல்லாம் கத்தரித் தோட்டங்களைப் பார்ப்பது அரிது. ஆனால் கத்தரித் தோட்டத்து வெருளி என அழைக்கப்படும் நிறையப்பேரைப் பார்க்கலாம். இந்த வெருளிக்கேன் இவ்வளவு மௌசு வந்தது? நவாலியூர் சோமசுந்தரப் புலவர் என்ன சொல்கிறாரெனப் பார்ப்போம்.

கத்தரி வெருளி

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
-------------------------------------------

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று

காவல் புரிகின்ற சேவகா! - நின்று

காவல் புரிகின்ற சேவகா!

மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்

வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்

வேலை புரிபவன் வேறுயார்?



கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்

காவல் புரிகின்ற சேவகா! - என்றும்

காவல் புரிகின்ற சேவகா!

எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக

ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்

ஏவல் புரிபவன் வேறுயார்?



வட்டமான பெரும் பூசினிக்காய் போல

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!

கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!



தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்!

கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய

கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா

கட்டை உடைவாளின் தேசுபார்!



பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ?

வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே



கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு

கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்

கத்திக் கத்திக் கரைந்தோடுமே

நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு

நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி

நடுநடுங்கி மனம் வாடுமே



ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்

ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல

ஏவற்காரன் நீயே யென்னினும்

ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே

ஆவதறிந்தன னுண்மையே - போலி

ஆவதறிந்தன னுண்மையே



தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

சேரச் சேரப் போலி வேடக்காரனென்று

தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று

தெரிய வந்ததுன் வஞ்சகம்



சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்

தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்

தேசத்திலே பலர் உண்டுகாண்

அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா

அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்

அறிவு படைத்தனன் இன்றுநான்.

Courtesy: http://paadal.blogspot.ca/2005/03/blog-post.html

No comments:

Post a Comment